இந்த வருடத்தில் எப்படியும் குறைந்தது இருபத்தைந்து ப்ளாக் எழுதியாக வேண்டும் என்ற எண்ணம். ஆனால் எப்படியெல்லாமோ உருண்டு புரண்டு யோசித்தாலும் அதற்கான கரு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், எக்காரணத்திற்காகவும் அருவி படத்தின் விமர்சனத்தை எழுதக்கூடாது என்றிருந்தும் இப்பொழுது இதைப்பற்றியே எழுதவேண்டிய சூழ்நிலை. படத்தின் முதல் போஸ்டரை பார்த்தபொழுதே எப்படியும் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். அதன்பின் இரண்டாம் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் படத்தின் விமர்சனம் என தொடர்ந்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. கொலைபசியில் இருக்கும்பொழுது தலப்பாகட்டி பிரியாணியை தந்தால் எப்படி இருக்கும் அதே மனநிலையில் இருந்தேன்.
படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் தங்க மீன்கள் பார்ட்-2 ஆக இருக்குமோ என்ற பயம் ஆனால் சட்டென்று அடுத்தடுத்த காட்சிகளில் நாயகி வளர்ந்துவிடுவதால் சுமார் இருபது நிமிடக் காட்சிகள் நன்கு ரசிக்க முடிந்தது. அதென்ன வெறும் இருபது நிமிடக் காட்சிகள் ஆம் முதல் இருபது நிமிடங்களுக்குப் பிறகு வேறு ஏதோ படத்திற்க்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணம் சுமார் நாற்பது ஐம்பது நிமிடங்கள் நீள்கிறது. சமூகம், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆதங்கத்தை கொஞ்சம் காமெடி கொஞ்சம் கோபம் கலந்து தர முயற்சி செய்திருக்கிறார். இதற்கிடையில் மால்களில் படம் பார்ப்பவர்களையும் திட்டி தீர்த்துவிடுகிறார் இயக்குனர்.
முதல் முப்பது நிமிடங்கள் ரசிக்கும்படியாகவும் அடுத்த ஜம்பது நிமிடங்கள் சுமாராக இருந்தாலும் படத்தின் மத்த குறைகளை மறக்கசெய்து பார்வையாளர்களின் இரும்பு மனங்களையும் அழவைக்கிறது அந்த கடைசி இருபது நிமிடக் காட்சிகள். ஆம் இதுவரை திரைப்படங்களில் வந்த காட்சிக்காக இப்படி அழுததில்லை. ஆனால் ஏனோ இந்த அருவி அழவைத்துவிட்டால், என்னை மட்டுமல்ல பார்வையாளர்களில் 95 சதவீதம் கண் துடைத்துக்கொண்டு தான் இருந்தார்கள். உறவுகளோ, தெரிந்தவர்களோ இல்லை நண்பர்களோ ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருந்தால் கண்டிப்பாக இந்த இருபது நிமிடக் காட்சிகள் ஒருவிதமான வலியை உணர்த்தும். பணம், புகழ், பலம் இதையெல்லாம் படைத்த ஆளுமை ஏதோ ஒரு வியாதியால் விழுந்தால் அடியோடு தூக்கி வீசப்படுவான் என்பதை உணர்த்துகிறது இந்த படம். எத்தனையோ மேடுபள்ளங்களை கடந்து கடலில் சேரும் அருவியைப் போல சில குறைநிறைகளை கடந்து சினிமா ரசிகர்களின் மனதில் கலந்துவிடுகிறாள் இந்த "அருவி".