தமிழ் சினிமா, சென்ற வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகச் சிறந்த படங்களை இந்த வருடத்தின் முதல் பாதியிலேயே தந்துவி்டடது. கடந்த ஒரு மாதம் எந்த நல்ல படமும் இல்லை என்ற குறையை விக்ரம் வேதா படத்தின் மூலம் தீர்த்துக்கொண்டார்கள் சினிமா ரசிகர்கள். நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இரண்டு மூன்று முறை பாா்த்து அவர்களுக்குள் ஆத்ம திருப்தியை அடைந்துள்ளார்கள். நிச்சயமாக இந்த படத்திற்க்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஒருபக்கம் என்றால் புஷ்கர் அண்ட் காயத்ரி மறுபக்கம். இதில் மாதவன் அண்ட் விஜய் சேதுபதி கூட்டணி கண்டிப்பாக கண்களுக்கு விருந்தளிக்கும் என்றிருந்தாலும் தோல்வியை ருசித்த இயக்குனர்கள் சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு தன் புதிய அவதாரத்தை தந்திருப்பார்களோ என்ற எதிா்பார்ப்பே அதிகமிருந்தது. இதே எதிர்பாா்ப்புடன் படத்திற்க்குள் நுழைய படம் ஆரம்பித்த அடுத்த நொடியில் சட்டென்று இருக்கையை கச்சிதமாக பற்றிக்கொண்டேன்.
பழைய விக்ரமாதித்தன் வேதாளம் என ஆரம்பித்து அந்த சின்ன கதையின் முடிவில் நான் ஒரு கதை சொல்லவா என படத்திற்குள் அழைத்து செல்கிறது வேதாளம். படத்தின் ஆரம்ப காட்சிகளே சொல்லிவிடுகிறது இன்றைய தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்குமென்று. ஆரம்பத்திலிருந்து சுமார் முப்பது நிமிட காட்சிகள் மாதவன் கைவசமிருந்தாலும் சற்றும் தோய்வில்லாமல் கத்தி முனையைப் போன்று அவ்வளவு கூர்மையாக நகர்கிறது திரைக்கதை இருந்தும் இன்னும் மெறுக்கேற்றும் விதமாக பெரிய ஆச்சரியத்திலும், ஆர்வத்திலும் முழ்க வைக்கிறது விஜய் சேதுபதியின் ஆரம்ப காட்சி. வி.சேயின் ஆர்மபக் காட்சியையும், அதன் பின்னணி இசையையும் ரசிக்காதவர்கள் இருந்தால் அவர்கள் சினிமாவை ரசிக்க தெரியாதவர்களாக இருக்கவேண்டும். விஜய் சேதுபதிக்கே உரிய நடை, உடை, பாவனை மற்றும் நக்கல் கலந்த வசன உச்சரிப்புகள் என அனைத்தும் அப்ளாஸ் ரகம். இறுதிச்சுற்றில் ரசித்ததைக் காட்டிலும் ஒருபடி கீழே என்றாலும் விக்ரம் பாத்திரத்தில் கச்சிதமாக நிற்கிறார் மாதவன். ஷ்ராத ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் கதிர் படத்தின் முக்கிய பாத்திரமாக விளங்குகிறார்கள். ஷ்ராத ஸ்ரீநாத், கோஹிநூர் என்னும் மலையாள படத்தில் தான் அறிமுகம் பிறகு யு டர்ன் என்ற கன்னட படத்தின் மூலமாக பிலிம் பேருடன் இன்னும் சில விருதுகளை குவித்திருக்கிறார் அம்மணி. கேக்கின் மேல் தடவிய க்ரீமைப் போல வழவழப்பாக உள்ள இவரை ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறது திரைக்கதை அதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் இல்லையென்றால் இவரை ரசித்து திரைக்கதையை கோட்டை விட்டிருக்க வேண்டும். இயக்குனர்களின் முந்தைய படங்கள் நினைவில் வராமல் போவது பெரும் ஆச்சரியம். அந்த தோல்வியை பக்குவமாக எடுத்துக் கொண்டு அதற்கு பரிகாரமாக ஒரு சிறந்த படைப்பை அளித்திருக்கிறார்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி.
விக்ரம்-வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
- பாஸ்கி.


