குறைந்த பட்ஜெட்டில் தயாரான தமிழ் மொழி (மற்ற மொழி படங்களுக்கும் பொருந்தும்) படங்களை பக்கத்து மாநிலங்களில் கூட திரையிடப்படுவது வழக்கத்தில் இல்லாத ஒன்று. இப்படியான பட்ஜெட் படங்களையெல்லாம் பக்கத்து மாநிலத்தில் உள்ள ரசிகர்கள் இணையத்தில் தவிர வேறு எப்படியும் பாா்க்க முடியாது, பெங்களூரில் வசித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் இந்த கா்மா பொருந்தும். இத்தகைய கா்மாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லாமல் 8 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். இப்படித்தான் நல்ல படங்களை திரையிடாமல் என் சாபங்களை வாங்கிக் கொண்டிருங்கின்றது இந்த பூங்கா நகரம். இத்தகைய சூழலில் திருட்டு விசிடி கை கொடுத்தாலும் தரமான படங்களை இணையத்தில் பார்ப்பதை தவிா்த்து விட்டு பெங்களூரில் இருந்து சராசரியாக 45 கிமீ தூரத்தில் உள்ள ஒசூர் சென்று பாா்ப்பது வழக்கம். கடந்த 8 வருடங்களில் சுமார் ஆறு படங்கள் இப்படி ஒசூர் சென்று பாா்ததுண்டு. சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த கா்மா லென்ஸ் படத்தின் மூலமாக மீண்டும் என்னை துரத்தியது, படத்தின் விமர்சனங்கள் என்னை எப்படியும் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று உசுப்பேற்றியது. சாக்கடையில் தொலைத்த காசைத் தேடும் கையைப் போல இணையத்தில் துழாவினேன் இந்த நகரத்தில் எங்கும் வெளியிடவில்லை அதுமட்டுமில்லாமல் ஒசூரிலும் படம் வெளியாகவில்லை எனத் தெரிந்த பின்பு பல மணி நேரத்திற்க்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ ஒரு காரணமாக கிருஷ்ணகிரி போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் உடனே பயணித்து எனது வேலையையும் முடித்த பிறகு லென்ஸ் திரைப்படம் ஒடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சென்றடைந்தேன். படம் ஆரம்பிக்க 10 நிமிடங்களே இருந்த தருணத்தில் கூட்டத்தில் இருந்த எண்ணிக்கை 10 பேர் இருந்திருக்க கூடும் இத்தனைக்கும் வெளியாகிய மூன்றாவது நாள் (ஞாயிற்றுக் கிழமை வேறு), நல்ல படங்களை நாம் எப்போதும் ஆதரித்ததில்லை இனியும் ஆதரிக்கப்போவதில்லை என்பதை அங்கு வந்திருந்த கூட்டத்தை வைத்துத் தெரிந்துக்கொண்டேன்.
படம் ஆரம்பித்த நிலையில் இந்த 10 என்ற எண்ணிக்கை 20 இல்லை முப்பதை அடைந்திருக்கும். வெற்றிமாறன் தயாரிப்பும், படத்தின் போஸ்டரும் பெரும் தான் எதிர்பாா்ப்பை ஏற்படுத்தியது. அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அனுமதியின்றி படம்பிடித்து அதை இன்டெர்நெட்டில் பரப்புவதாலும் அதனால் ஏற்படும் அவமானங்களால் உயிரை மாய்ப்பதே படத்தின் கதை. ஆரம்பமே முகம் சுளிக்க வைத்தாலும் படத்திற்கான முக்கிய காட்சி என்பதாலும் தவிர்க்க வேண்டாம். படத்தின் ஆரம்பத்தில் தொடரும் பயம் க்ளைமெக்ஸ் வரை துளியும் குறையாமல் அப்படியே நீள்கிறது. இடையில் இரண்டு மூன்று ஜோடிகள் படத்தின் பாதிப்பால் பாதியிலேயே ஜூட் விட்டன. இந்த கதையின் சம்பவங்கள் அவ்வபொழுது செய்திகளாக காதில் விழுந்திருந்தாலும் காட்சிகளாக்கிய விதம் பயத்தின் உச்சம். இன்றைய பெரும் பொழுதுப்போக்கான இன்டெர்நெட்டின் நடுநிசிகளை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறது இந்த லென்ஸ். அடுத்தவர்களின் வலிகளால் இன்பம் அடையும் மனிதர்கள் மிருகத்தின் சாயல் என்பார்கள் அதுதான் இந்த படத்தின் மைய கருவும் கூட, இப்படியான கதைகளத்தை இயல்பாக காட்டியது ஒருபுறம் என்றாலும் படத்தின் காட்சிகள் ஒருவித கசப்பான அனுபவத்தை தருகிறது. லென்ஸ் கண்டிப்பாக குடும்ப படமா என்றால் ஆம் இது இரு குடும்பங்களின் பிரச்சனயை சொல்லும் படம் ஆனால் குடும்பமாக பார்க்க வேண்டிய படமா என்றால் குடும்பத்தில் உள்ள முக்கியமாக வளரும் பருவத்தினர் எல்லோரும் கண்டிப்பாக தனித்தனியாக பாா்க்க வேண்டிய படம்.
- பாஸ்கி.


No comments:
Post a Comment